டெல்லி காற்று மாசு: 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி காற்று மாசு: 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டத்தால் மட்டும் காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என கூறியுள்ள உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உ.பி. ஆகிய 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் வைக்கோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்துள்ளது.

இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்தது. பள்ளிகளுக்கும் 8-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.

காற்று மாசு சற்றே குறைந்ததை அடுத்து 6-ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையத்தின் அறிக்கைப்படி, காற்று மாசு மீண்டும் நெருக்கடி நிலையைத் தொட்டது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் இன்று வரை (நவம்பர் 15-ம் தேதி) அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் காற்று மாசு இன்று மிக மோசமான நிலையை தொட்டது. உலகிலேயே மிக மோசமான காற்று மாசு நகரம் என்ற நிலையை இன்று எட்டியது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததது.

அப்போது டெல்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் ‘‘ஒற்றை, இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் அடிப்படையில் இயக்கும் திட்டத்தால் போதிய பலன் கிடைத்துள்ளது. எனினும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் வைக்கோலை எரிப்பதால் தான் டெல்லியில் மிக மோசமான காற்று மாசு ஏற்படுகிறது.’’ எனக் கூறினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘‘டெல்லியில் காற்று மாசைக் குறைக்க புகை கோபுரங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ எனக் கூறினார்.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் வைக்கோலை எரிப்பதை நிறுத்திய பிறகும் காற்று மாசு மிக மோசமான அளவில் உள்ளது. ஒற்றை, இரட்டை இலக்க எண் அடிப்படையில் வாகனங்கள் இயக்கும் திட்டத்தில் இரண்டு மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளித்தது ஏன்.

வாகனக் கட்டுப்பாடு மூலம் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது. அனைத்து தரப்பினரும் ஒற்றிணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உ.பி. ஆகிய 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in