Published : 14 Nov 2019 05:09 PM
Last Updated : 14 Nov 2019 05:09 PM

ஹரியாணாவில் சந்தீப் சிங் உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு: பாஜகவுக்கு கூடுதல் இடம்

ஹரியாணாவில் இன்று 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்தவர், மற்றொருவர் சுயேச்சை எம்எல்ஏ ஆவார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்திப் சிங்கிற்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் கடந்த மாதம் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 இடங்களில் ஆளும் பாஜக 40 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டது.

இதனால், சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. இதனையடுத்து ஆளுநர் பாஜக கூட்டணிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

ஹரியாணா முதல்வராக மனோகர்லால் கட்டார் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். துணை முதல்வராக ஜனநாயக ஜனதாக் கட்சியின் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றார். அவர்கள் இருவருக்கும் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்தநிலையில் ஹரியாணா அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதில் 6 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களில் 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்தவர், மற்றொருவர் சுயேச்சை எம்எல்ஏ ஆவார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்திப் சிங்கிற்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x