Published : 10 Aug 2015 08:34 AM
Last Updated : 10 Aug 2015 08:34 AM
டெல்லியில் போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்எல்ஏ அல்கா லாம்பா மீது மர்ம நபர் ஒருவர் நேற்று கல் வீசி தாக்குதல் நடத்தினார். அதில் அல்கா தலையில் காயம் ஏற்பட்டது.
வடக்கு டெல்லி, காஷ்மீர் கேட் பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் போதைப் பொருள் களுக்கு எதிரான பிரச்சாரத்தில் அல்கா லாம்பா ஈடுபட்டிருந்தார்.
அவர் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் மீது மர்ம நபர் ஒருவர் கல் வீசி தாக்கினார்.
இதில் தலையில் காயம் அடைந்த அல்கா உடனே அருணா ஆசப் அலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இத்தாக்குதல் பற்றி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “அல்கா லாம்பாவை தாக்கியவர், பாஜக எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சர்மாவின் ஸ்வீட் கடையில் வேலை செய்பவர் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். இதில் சதி உள்ளது. இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி போராடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பின் அல்கா லம்பா தனது ட்விட்டர் பக்கத்தில், “போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவு இது. தாக்குதலில் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் எனது குறிக்கோளில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “அல்காவால் பெருமிதம் கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இத்தாக்குதலில் பாஜக எம்எல்ஏ ஓம் பிரகாஷ் சர்மாவுக்கு தொடர்பு உள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் நேற்று கூறும்போது, “பாஜக எம்எல்ஏ ஓ.பி. சர்மாவின் கடைக்கு வெளியே அல்கா பேசிக்கொண்டிருந்த போது, அக்கடையில் வேலை செய்யும் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் பாஜக எம்எல்ஏவுக்கு உள்ள தொடர்பு குறித்து போலீஸார் விசாரிக்க வேண்டும்” என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை டெல்லி பாஜக மறுத்துள்ளது.
இதனிடையே தாக்குதல் தொடர்பாக ஜிதின் என்பவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT