Published : 14 Nov 2019 12:43 PM
Last Updated : 14 Nov 2019 12:43 PM

சபரிமலை; 7 நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

சபரிமலை விவகாரத்தில் 7 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும், தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் ‘‘பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம்'' என தீர்ப்பளித்தனர்.

அதேசமயம் 7 நீதிபதிகள் உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது, தற்போதைய நிலை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கேரள மாநில பாஜக மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறியதாவது:

‘‘சபரிமலை விவகாரத்தில் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் முந்தைய தீர்ப்பில் சில தவறுகள் இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த உத்தரவு எங்களுக்கும் சபரிமலை பக்தர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே 7 நீதிபதிகள் அமர்வின் முடிவு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வயதில் உள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டால் அதனை கேரள அரசு ஆதரிக்க கூடாது. தடுத்து நிறுத்த வேண்டும்’’.

இவ்வாறு கும்மனம் ராஜசேகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x