Published : 14 Nov 2019 12:27 PM
Last Updated : 14 Nov 2019 12:27 PM

‘‘சபரிமலையில் பிரச்சினையை ஏற்படுத்தாதீர்கள்’’ - கேரள அரசுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்

சபரிமலை விவகாரத்தில் முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படாததால் இதனை வைத்துக் கொண்டு கேரள அரசு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது என கேரள எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் ‘‘பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம்'' என தீர்ப்பளித்தனர்.

அதேசமயம் 7 நீதிபதிகள் உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது, தற்போதைய நிலை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:

‘‘சபரிமலை விவகாரத்தில் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. இதனை வைத்துக் கொண்டு சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது. சபரிமலைக்கு தடை செய்யப்பட்ட வயதில் பெண்கள் செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறி கேரள அரசு பிரச்சினையை ஏற்படுத்தக் ஈடுபடக்கூடாது’’.

இவ்வாறு ரமேஷ் சென்னிதலா கூறினார்.

இதுபோலவே சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு மூலம் பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x