Published : 14 Nov 2019 12:06 PM
Last Updated : 14 Nov 2019 12:06 PM

சபரிமலை மண்டல பூஜை: 16-ம் தேதி கோயில் நடை  திறப்பு; பலத்த பாதுகாப்பு

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் மண்டல பூஜைக்காக நவ.16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் ‘‘பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம்''. என தீர்ப்பளித்தனர்.

அதேசமயம் 7 நீதிபதிகள் உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது, தற்போதைய நிலை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இன்றைய உத்தரவின் மூலம் இதனால் பெண்கள் கோயிலுக்குச் செல்லலாம் என்ற சூழல் தற்போது உள்ளது. வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து கேரள அரசு அதனை செயல்படுத்த முயன்றபோது அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் பரவலாக வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.

இந்தநிலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.16-ம் தேதி திறக்கப்படுகிறது. 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

ஐயப்பன் மேல் சாத்தப்பட்ட விபூதி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். மேல்சாந்தியின் பதவிக்காலம் அன்றுடன் முடிவடைவதால் புதிதாக தேர்வான மேல்சாந்தி சுதிர் நம்பூதிரியிடம் கோயில் சாவி ஒப்படைக்கப்படும்.

மறுநாள் காலை கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிச.27-ம் தேதி நடைபெறும்.

மண்டல பூஜை சீசன் தொடங்க இருப்பதால் சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. சபரிமலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x