Last Updated : 13 Nov, 2019 03:08 PM

 

Published : 13 Nov 2019 03:08 PM
Last Updated : 13 Nov 2019 03:08 PM

அரசியலமைப்பு கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் செயல்படுவது அதிகரிப்பு: எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் வேதனை

நடுநிலையுடன் நடந்து கொள்ளுதல் எனும் அரசியலமைப்புக் கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது என்று எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் வேதனை தெரிவித்துள்ளது

கர்நாடகாவில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தும், அவர்களை இந்த சட்டசபைக்காலம் முடியும் வரை தகுதிநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்தது.
இந்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

சபாநாயகர் நடுநிலையானவர். எந்த கட்சி சார்பும் இல்லாமல் செயல்படக்கூடியவர். சட்டப்பேரவையை நடத்தும் போதும், மனுக்களை பரிசீலனைக்கு எடுக்கும் போதும், நடுநிலையாக இருக்கக்கூடியவர், செயல்படக் கூடியவர் சுயமாக, தனித்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசிலமைப்புச் சட்டம் வகுத்துள்ள கடமையைப் பின்பற்றி சபாநாயகர் செயல்படக் கூடியவர், கண்காணிப்பில் இருக்கக்கூடியவர். அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் சார்புகள் இல்லாமல், அதன் குறுக்கீடுகள் இல்லாமல் அவர் மனுக்களில் நீதி வழங்க வேண்டும்.

தான் சார்ந்திருக்கும் அரசியல்கட்சியோடு தொடர்பைத் துண்டிக்கச் சபாநாயகரால் முடியாவிட்டால், அவரின் செயல்பாடுகள் நடுநிலைத்தன்மை, சுதந்திரமான செயல்பாட்டின் சாரம்சத்துக்கு விரோதமாக அமைந்து விடும், அவ்வாறு நடக்காமல் செயல்பட வேண்டும். அவ்வாறு சபாநாயகர் செயல்படாவிட்டால், மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற முடியாது

ஆனால், எந்த வழக்கை எடுத்தாலும், நடுநிலையுடன் செயல்படுதல் என்ற அரசியலமைப்புக் கடமைக்கு எதிராகவே சபாநாயகர்கள் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள் குதிரை பேரம், ஊழல் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுவதால், வாக்களித்த மக்களுக்கு நிலையான அரசு அமைவது மறுக்கப்படுகிறது

இந்த சூழலில், அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது பட்டியலை வலுப்படுத்துவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்துக்கு விரோதமான போக்குகள், வழக்கங்கள், செயல்கள் குறைக்கப்பட வேண்டும்

கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி கொறடா உத்தரவை மீறியதால் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் உத்தரவு செல்லும். இடைத் தேர்தலில் போட்டியிடும் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால் அவர்கள் அமைச்சர் உட்பட வேறு எந்த அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை. இது சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் வராது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x