Published : 13 Nov 2019 11:13 AM
Last Updated : 13 Nov 2019 11:13 AM

17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; தேர்தலில் போட்டியிடலாம்: உச்ச நீதிமன்றம்

கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் அவர்கள் மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இரு கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, இவர்களை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்தது.

(படவிளக்கம்: 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்த அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார்)

இந்நிலையில், கர்நாடக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அதனால் 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் உத்தரவு செல்லும்.

இதுபோன்ற வழக்குகளில் எம்எல்ஏக்கள் முதலில் உயர் நீதிமன்றத்தையே அணுகி இருக்க வேண்டும்.
அதேசமயம் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும். கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது.

அதுபோலவே இடைத் தேர்தலில் போட்டியிடும் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால் அவர்கள் அமைச்சர் உட்பட வேறு எந்த அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை. இது சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் வராது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x