Published : 12 Nov 2019 05:07 PM
Last Updated : 12 Nov 2019 05:07 PM

‘‘இது அரசியல் சட்டப் படுகொலை’’ - சீதாராம் யெச்சூரி கடும் விமர்சனம்

மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரியின் முடிவு அரசியல் சட்டத்தை படுகொலை செய்யும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் பாஜக – சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.

இதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்து விட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி எடுத்தது. இதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது.

ஆனால் அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வந்தன.

எனினும் சிவசேனாவுக்கு சில நிபந்தனைகளை விதிக்க தேசியவாத காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் இறுதி முடிவெடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்தநிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் கோஷியாரி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு இல்லாத சூழலில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது என முடிவெடுக்கப்பட்டது.

ஆளுநரின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு இரவு 8.30 மணிவரை அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நேரம் அளித்துள்ளார். ஆனால் கெடு முடிவதற்குள் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த எப்படி பரிந்துரைக்க முடியும். இது அரசியல் சட்டப் படுகொலை’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x