Published : 12 Nov 2019 11:02 AM
Last Updated : 12 Nov 2019 11:02 AM
ராஞ்சி
மகாராஷ்டிர மாநிலத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட்டிலும் பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதன் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 30, டிசம்பர் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆளும் பாஜக கட்டணியில் ஜார்கண்ட் மாணவர் அமைப்பு, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்தநிலையில் ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதாதளம் முடிவெடுத்துள்ளது. அண்மையில் நடந்த அந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. எனினும் ஐக்கிய ஜனதாதளத்தை சமரசம் செய்யும் முயற்சி வெற்றி பெறவில்லை.
கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேரதலில் பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் வெளியேறி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தற்போது பாஜக கூட்டணியில் அதிருப்தி நிலவுகிறது. அதுபோலவே மற்றொரு கூட்டணி கடசியான ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பும் கூட்டணி விவகாரத்தில் இறுதியான முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டணிக் கட்சியான சிவசேனாவுடன் பாஜகவுக்கு கடும் மோதல் எழுந்துள்ள நிலையில் ஜார்க்கண்டிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT