Published : 10 Nov 2019 07:41 AM
Last Updated : 10 Nov 2019 07:41 AM

இந்திய அரசியலை புரட்டிப்போட்ட வழக்கின் முழு விவரம்

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி.(கோப்பு படம்)

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

இந்திய அரசியலை புரட்டிப் போட்ட அயோத்தி நிலத் தகராறு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. ராமர் பிறந்த இடமாகக் கருதப்பட்ட இடம், யாருக்கு சொந்தமானது என்பதன் மீதான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பழமையான இந்த வழக்குக்கு 70 வருட வரலாறு உண்டு. சுதந்திர இந்தியாவில் இந்தப் பிரச்சினை துவங்கிய நாள் 23 டிசம்பர், 1949 ஆகும். இதற்கு முன்தினம் நள்ளிரவு, அபய் ராம் தாஸ், ராம் ஷகல்தாஸ், சுதர்ஷன் தாஸ் உள்ளிட்ட சுமார் அறுபது பேர் பாபர் மசூதியின் பூட்டை உடைத்து, குழந்தை உருவ ராமர் சிலையை உள்ளே வைத்தனர். இதற்காக, அனைவரின் மீதும் ஐபிசி 147/29/449 ஆகிய பிரிவுகளின்படி அயோத்தி காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி பண்டிட் ராம் தியோ துபே என்பவரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து இதில் பைசாபாத் நகர கூடுதல் மாஜிஸ்திரேட்டால் போடப்பட்ட ஒரு இடைக்கால உத் தரவின்படி, பாபர் மசூதியின் முக் கிய வாசல் பூட்டப்பட்டு டிசம்பர் 29-ல் பிரியாதத் ராம் என்ற தனி அதிகாரியின் பராமரிப்பில் விடப் பட்டது. இத்துடன், அந்த சொத்தை பராமரிப்பது குறித்து ஒரு அறிக்கை அளிக்குமாறும் பிரியா தத்திடம் கேட்டு கொள்ளப்பட்டது. இவர் ஜன வரி 5, 1950 -ல் அளித்த அறிக்கை யின்படி ஒரு பூசாரியை அமர்த்தி பாபர் மசூதியில் இருந்த ராமர் சிலைக்கு அரசு சார்பில் பூஜைகள் நடத்தப்பட்டன. இதுவரை கிரிமினல் வழக்காக இருந்த இந்த விவகாரம் சிவில் வழக்காகி அதன் நீதிமன்றத்துக்கு மாறுகிறது.

ஜனவரி 16, 1950-ல் கோபால்சிங் விஷாரத் என்பவர், பாபர் மசூதியின் முத்தவல்லியான ஜஹூர் அகமது, உ.பி. மாநில அரசு மற்றும் பலர் மீது முதல் சிவில் வழக்கை பைசாபாத் நீதிமன்றத்தில் தொடுக் கிறார். இதில், ராமஜென்ம பூமியில் வைக்கப்பட்டிருக்கும் ராமர் சிலையை நிரந்தரமாக அகற்றக் கூடாது எனவும், அதனிடம் சென்று நாள்தோறும் பூஜை செய்ய எந்த விதமான தடங்கல்களும் தனக்கு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இடைக் கால உத்தரவை கோருகிறார். அடுத்த மூன்றாவது நாளில் அளிக் கப்பட்ட அதற்கான அனுமதி இன்று வரை அமலாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அயோத்தி வழக் கின் விசாரணையில் உ.பி. அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்படு கிறது. அதில், பிரச்சினைக்குரிய சொத்தானது ‘பாபர் மசூதி’ எனும் பெயரில் அழைக்கப்பட்டு பலகால மாக இங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருவதாகவும், இதனுள் சட்ட விரோதமாக ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதை எதிர்த்து டிசம்பர் 5, 1950-ல் பரமஹன்ஸ் ராமச்சந்திரதாஸ் என்பவர் கோபால்சிங் தொடுத்தது போலவே அங்கு பூஜை நடத்த அனுமதி கேட்டு மூன்றாவதாக ஒரு வழக்கு தொடுக்கிறார். இது இரண்டாவது வழக்குடன் இணைக்கப்பட்டு பைசா பாத் சிவில் நீதிமன்றத்திலேயே நடைபெற்று வந்தது.

நான்காவதாக டிசம்பர் 17, 1959-ல் நிர்மோகி அகாடா சார்பில் போடப்பட்ட ஒரு வழக்கில் தனி அதிகாரியான பிரியாதத் ராமிடம் இருக்கும் கட்டிடத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகிறார். பிறகு டிசம்பர் 18, 1961-ல் சன்னி சென்ட்ரல் வஃக்பு வாரியம் சார்பில் ஐந்தாவதாக ஒரு வழக்கு கோபால்சிங் விஷாரத் மற்றும் சிலரை எதிர்த்து போடப்படுகிறது. இதில், உ.பி. அரசு வசம் இருக்கும் பாபர் மசூதி தங்களுக்கு சொந்தமானது எனவும், உள்ளே இருக்கும் ராமர் சிலையை அகற்றி, கட்டிடம் மற்றும் சமாதிகள் இருக்கும் அதன் சுற்றுப்புற நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோருகிறது.

இவை அனைத்தும் ஒரே மாதிரியான வழக்குகள் என்பதால், மனுதாரர்கள் இசைவுடன் ஜனவரி 6, 1964 முதல் பைசாபாத்தின் நீதிமன்ற நீதிபதி ஒன்றாக்கி விசாரிக்கத் தொடங்குகிறார். இத்துடன், சிவில் நீதிமன்றத்தின் சில உத்தரவுகளுக்கு இரு தரப்பினரும் உயர் நீதிமன்றம் சென்று இடை இடையே தடை உத்தரவு பெறுவதும் தொடர்ந்தது.

ஆறாவதாக உமேஷ்சந்திர பாண்டே என்ற வழக்கறிஞர் உள்ளே இருக்கும் ராமரை தரிசிக்க மற்றும் பூஜை செய்ய ஏதுவாக கட்டிடத்தின் கதவுகளை திறந்து விட வேண்டும் என சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கிறார். இது சம்மந்தப்பட்ட கோப்புகள் உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் சிவில் நீதிமன்றம் ஜனவரி 28, 1986-ல் அனுமதி தர மறுக்கிறது. இதை எதிர்த்து உமேஷ் சந்திர பாண்டே மாவட்ட நீதிமன்றத்தில் செய்த அப்பீல், விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த அப்பீலை எதிர்த்த பாபர் மசூதியின் அப்போதைய முத்தவல்லியான முகம்மது ஹாசீம் அன்சாரி மற்றும் ஜஹுர் அகமதின் மகன் முகம்மது ஃபரூக் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடுத்ததுடன் மாவட்ட நீதிமன்ற உத்தரவு மீது தடையும் கோருகின்றனர். இதில், சிவில் நீதிமன்ற விசாரணை முடியும் வரை, பிரச்சினைக்குரிய சொத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு போடுகிறது.

இதே போல், உமேஷ் சந்திர பாண்டேவின் அப்பீல் மனு விசா ரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட் டதை எதிர்த்து, சன்னி சென்ட்ரல் வஃக்பு வாரியம் சார்பாகவும் ஒரு மனு மாவட்ட நீதிமன்றத்தில் மே 12, 1986-ல் போடப்படுகிறது. இதை அடுத்து டிசம்பர் 16, 1987-ல் உ.பி. அரசு சார்பில் 24/151 சிவில் சட்டம் 1908 பிரிவின்படி, முதல் நான்கு முக்கிய வழக்குகளும் சிவில் நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என கோருகிறது.

உ.பி. அரசின் இந்த மனுவை ஏற்றுக் கொண்ட பைசாபாத் மாவட்ட சிவில் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், முதல் நான்கு வழக்குகளை வாபஸ் பெறச் செய்ததுடன், பாண்டே, அன்சாரி மற்றும் சன்னி வஃக்பு வாரியத்தினால் போடப்பட்ட வழக்குகளையும் மூன்று நீதிபதி கள் கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் விசாரிக்கும் என ஜூலை 10, 1989-ல் உத்தரவிடுகிறது.

இந்த சூழலில், டிசம்பர் 6, 1992 -ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு விட, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் தியோகி நந்தன் அகர்வால் என்பவர் புதிதாக ஒரு வழக்கு தொடுக்கிறார். இதுவும் சேர்த்து பாபர் மசூதி சொத்து குறித்த அனைத்து வழக்குகளும் 1989 முதல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் தீர்ப்புதான் கடந்த செப்டம்பர் 30, 2010-ல் வெளியானது.

இதில் மூன்று முக்கிய மனுதாரர்களான இந்து தரப்பு, ராம் லல்லா, சன்னி வஃக்பு வாரியம் ஆகிய மூன்றுக்கும் 2.77 ஏக்கர் நிலம் பிரித் தளிக்க உத்தரவிடப்பட்டது. இதை முக்கிய மனுதரார்கள் மூவரும் ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவர்களுடன் மற்றவர்களும் இணைய மொத்தம் 14 பேர் தொடுத்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x