Published : 09 Nov 2019 06:45 PM
Last Updated : 09 Nov 2019 06:45 PM
கொல்கத்தா
அயோத்தி வழக்கில் இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மேற்குவங்க முதல்வர் இதுவரை கருத்து ஏதும் கூறவில்லை.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வந்தன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மேற்குவங்க முதல்வர் இதுவரை கருத்து ஏதும் கூறவில்லை.
இதுமட்டுமின்றி அயோத்தி விவகாரம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் வாய் திறக்கக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் செய்தியாளர்கள் பலரும் திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டனர்.
ஆனால் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்த பிறகு மட்டுமே தாங்கள் பேச முடியும் என கூறினர். மேலும், அதுவரை கருத்து ஏதும் தெரிவிக்க வேண்டாம் என கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT