Published : 09 Nov 2019 01:15 PM
Last Updated : 09 Nov 2019 01:15 PM

‘‘அயோத்தி தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல்’’ -  அமித் ஷா கருத்து

புதுடெல்லி

அயோத்தியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா கூறியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''அயோத்தியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்சைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இன்று அளித்துள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல். தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் அமைதி, மதநல்லிணக்கத்தைக் காக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பதற்காகப் போராடிய அமைப்புகள், சன்னியாசிகள், பெயர் தெரியாத மக்கள் லட்சக்கணக்கானோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x