Published : 09 Nov 2019 12:47 PM
Last Updated : 09 Nov 2019 12:47 PM

அயோத்தி தீர்ப்பு; ராமர் கோயிலுக்காக தியாகம் செய்த லட்சக்கணக்கான இந்துக்களுக்கு சல்யூட்: பிரவீன் தொகாடியா பேச்சு

புதுடெல்லி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்ற உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ராமர் கோயிலுக்காக தியாகம் செய்த லட்சக்கணக்கான இந்துக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா கருத்துத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று 450 ஆண்டுகளாக இந்துக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராமர் கோயிலுக்காக லட்சக்கணக்கான இந்துக்கள் தங்கள் உயிரை, வாழ்க்கையை, குடும்பத்தைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தத் தீர்ப்பை அர்ப்பணிப்பதோடு, சல்யூட் செய்கிறேன். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். லட்சக்கணக்கான இந்துக்கள் செய்த தியாகத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்" என்று பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் சரத் சர்மா கூறுகையில், "அயோத்தியில் விரைவில் ராமர் கோயிலை அரசே கட்டும் என்று நம்புகிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம். அயோத்தியில் உள்ள மக்கள் அனைவரும் அமைதி காத்து, பொறுமையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். எந்தவிதமான கொண்டாட்டங்களோ அல்லது போராட்டங்களோ தீர்ப்பு தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் நடத்தாது" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x