Published : 09 Nov 2019 11:31 AM
Last Updated : 09 Nov 2019 11:31 AM

அயோத்தி வழக்கு: பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை; ஷியா வக்பு வாரியத்தின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி

அயோத்தியில் பாபர் மசூதி-ராமஜென் பூமி நில விவகார வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம் வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் அரசுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் நிலத்துக்கு உரிமை கோரிய ஷியா வக்பு வாரியத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

அதேசமயம், பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்று தொல்லியல் துறை அறிக்கையில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசித்து வருகிறது.

இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஷியா வக்பு வாரியம் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், அந்த நிலம் ஷியா வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது அல்ல. அது வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் பார்க்கும் போது, அரசுக்குச் சொந்தமானது என்பதால் ஷியா வக்பு வாரியத்தின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கையை முழுமையாக நிராகரிக்க முடியாது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. அதேசமயம், சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதியின் கீழ்பகுதியில் இருக்கும் கட்டிடம் முஸ்லிம்களின் கட்டிடமும் அல்ல. அதேசமயம், கோயில் இடிக்கப்பட்டுதான் கட்டப்பட்டதா என்றும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x