Published : 09 Nov 2019 11:14 AM
Last Updated : 09 Nov 2019 11:14 AM
புதுடெல்லி
அயோத்தி வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேசத்தின் சமூக ஒற்றுமையைப் பராமரிக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மக்களுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், " உச்ச நீதிமன்றத்தில் எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தேசத்தின் ஒற்றுமை, சமூக ஒற்றுமையைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருக்கும் பொறுப்பு இருக்கிறது.
இது மகாத்மாவின் தேசம். அமைதி மற்றும் அஹிம்சையில் நம்பிக்கை வைத்து பணிந்து நடக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT