Published : 08 Nov 2019 09:29 PM
Last Updated : 08 Nov 2019 09:29 PM

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை காலை தீர்ப்பு: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி

அயோத்தி வழக்கில் நாளை காலை 10;30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக் குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுக தீர்வு காண 3 பேர் கொண்ட சமரசக் குழுவை அரசியல் சாசன அமர்வு நியமித்தது.

இந்த குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழுவின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. நாற்பது நாட்கள் நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனிடையே, 3 பேர் அடங்கிய சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்னதாக வரும் 13-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.

நாளை தீர்ப்பு

இந்தநிலையில் அயோத்தி வழக்கில் நாளை (9.11.2019) காலை 10;30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


(உச்ச நீதிமன்ற அறிவிப்பு)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் தேவையில்லாத கருத்துகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பதிவிட வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உத்தரப் பிரதேச பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x