Published : 08 Nov 2019 06:51 PM
Last Updated : 08 Nov 2019 06:51 PM

‘‘பட்னாவிஸுக்கு வாழ்த்துகள்; மீண்டும் முதல்வராக கனவு காண வேண்டாம்’’ - சிவசேனா கருத்து

மும்பை

மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள பட்னாவிஸுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம், அதேசமயம் மீண்டும் ஒருமுறை முதல்வராக கனவு காண வேண்டாம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்றுடன் பதவிக் காலம் முடிவதால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.

இதுபற்றி சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள பட்னாவிஸுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேசமயம் மீண்டும் ஒருமுறை முதல்வராக கனவு காண வேண்டாம். சிவசேனா தலைமையில் தான் மகாராஷ்டிராவில் இனிமேல் ஆட்சியமையும். அடுத்த முதல்வர் எங்கள் கட்சியில் இருந்துதான் பதவியேற்பார்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x