Published : 08 Nov 2019 04:02 PM
Last Updated : 08 Nov 2019 04:02 PM

‘‘பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்’’ -  மத்திய அமைச்சர் அத்வாலே சந்திப்புக்குப் பின் சரத் பவார் பேட்டி

மும்பை

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி ஏன் அழைக்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக -சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தற்போதைய சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் முடிவடைவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் உறுதியுடன் உள்ளதால் பிரச்சினை தீரவில்லை.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்துப் பேசினார். பின்னர் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க பாஜக – சிவசேனா கூட்டணிக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும். மகாராஷ்டிராவில் பொருளாதாரம் மற்றும் நலனுக்கு வலிமையான ஒரு அரசு அமைய வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு ஏற்படும்.

மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி ஏன் அழைக்கவில்லை’’ என்று சரத் பவார் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x