Published : 07 Nov 2019 01:55 PM
Last Updated : 07 Nov 2019 01:55 PM

டெல்லி காற்று மாசு; ஒற்றை, இரட்டை இலக்க அடிப்படையில் வாகனம் இயக்க எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி
டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் வைக்கோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்துள்ளது.

இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்தது. பள்ளிகளுக்கும் 8-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ‘‘இந்த நடைமுறையில் வாகனங்களை தேர்வு செய்யும் நடைமுறை சட்டவிரோதமானது. தனி மனிதர்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதனால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. எனவே இதனை நிறுத்த வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டது.

அந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக இது நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் டெல்லியில் காற்று மாசு கணிசமாகக் குறைந்திருப்பதாக டெல்லி அரசு கூறியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x