Published : 07 Nov 2019 10:34 AM
Last Updated : 07 Nov 2019 10:34 AM

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தயாராகிறது பாஜக; ஆளுநருடன் இன்று சந்திப்பு; சிவசேனா விடாப்பிடி

மும்பை

மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை, அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தற்போதைய சட்டப்பேரவையின் காலம் நாளைக்குள் முடிவடைவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் உறுதியுடன் உள்ளதால் பிரச்சினை தீரவில்லை.

இந்தநிலையில் ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் பாஜக சார்பில் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளனர். அவ்வாறு ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தால் உடனடியாக பதவியேற்பும் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சிவசேனா தலைமை இறங்கி வராததால் அக்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தரப்பு முயன்று வருவதாகவும், இதனால் சிவசேனா எம்எல்ஏக்கள் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதனை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் பேட்டியளித்ததாவது:

சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்வர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. சமரச திட்டம் எதையும் பாஜக தரப்பு அளிக்கவில்லை. முதல்வர் பதவி என்பதற்கு குறைவான எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை உத்தவ் தாக்கரே சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை. சிவசேனா எம்எல்ஏக்களை ஓட்டலில் தங்க வைக்கப்போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே.

இதில் துளியும் உண்மையில்லை. எங்கள் எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கும் கொள்கைக்கும் மிகவும் விசுவாசமானவர்கள். அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள். அவர்கள் மீது கட்சித் தலைமைக்கும் முழு நம்பிக்கையுண்டு. அவர்களை யாராலும் தங்கள் அணிக்கு இழுக்க முடியாது.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x