Published : 06 Nov 2019 08:56 PM
Last Updated : 06 Nov 2019 08:56 PM

திரிபுராவில் 6 பேர் பட்டினியால் இறப்பு: பழங்குடியினருக்கு ரேஷனில் உணவுப்பொருட்கள் மறுப்பால் போராட்டம்

கவுகாத்தி,

திரிபுராவில் பட்டினியால் 6 பேர் உயிரிழந்தது எதிரொலியாக அங்கு பழங்குடி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் புரூ என்ற பழங்குடி மக்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள். இவர்களில் 6 பேர் பட்டினியால் மரணமடைந்துள்ளது பழங்குடியினரின் போராட்டத்துக்குக் காரணமாகியுள்ளது.

மிசோரமில் 1997-ல் அவர்களுக்கும், மாற்று சமூகத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக எராளமான புரூ என்ற பழங்குடி மக்கள் திரிபுராவுக்கு அகதிகளாக வந்தனர். இவர்களில் 35 ஆயிரம் பேர் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட அளவு பண உதவி மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கி வந்தது.

சமீபத்தில் இந்த உதவிகளை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் போதிய உணவு கிடைக்காமல் இந்த மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் அகதி முகாமில் இருந்த ஒரு குழந்தை உள்பட 6 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

ரேசன் பொருள் கிடைக்காததால் பட்டினி கிடந்து 6 பேரும் இறந்து விட்டதாக புரூ பழங்குடி அமைப்பினர் குற்றம் சாட்டினார்கள். இந்த சம்பவத்தால் அவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் ரேசன் பொருட்களை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனந்தபசாரில் இருந்து கஞ்சாபூர் செல்லும் சாலைகளில் ஆங்காங்கே தடைகளை ஏற்படுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்குத் திரிபுராவில் 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்ட புரூ பழங்குடியினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ரேஷன் பொருட்கள் கிடையாது என்று கூறியுள்ளது, ஆனால் குடும்பத்திற்கு ரூ.25,000 தருவதாகவும் ஆனால் இதுவும் இவர்கள் மீண்டும் மிஜோரம் மாநிலத்துக்கே சென்று விட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

“ரேஷன் பொருட்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வழங்கப்பட மாட்டாது. இவர்கள் மிஜோரமுக்கே திரும்பிச் சென்றுவிட்டால் குடும்பம் ஒன்றுக்கு ரூ.25,000 கொடுக்கப்படும்.

அக்டோபர் 3ம் தேதி இவர்களை இறுதியாக மிஜோரமுக்கு அனுப்பும் முயற்சியை அரசு எடுப்பதற்கு முன்பாக நிவாரண முகாமில் இருக்கும் இவர்களின் பெரியோருக்கு நாளொன்றுக்கு ரூ.2.33 தொகையும் சிறுவர்க்கு ரூ.1.33 தொகையும் அளிக்கப்பட்டதோடு பெரியோருக்கு 400 கிராம் அரிசி, சிறாருக்கு 225 கிராம் அரிசி தினப்படி வழங்கப்பட்டு வந்தது. இந்த ரேஷன் உதவிகள் நிறுத்தப்பட்டதையடுத்து குழந்தை உட்பட 6 பேர் பட்டிணிச்சாவு அடைந்துள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x