அரசியலமைப்புச் சட்டத்துக்கு 70 ஆண்டு: நவ.26-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு 70 ஆண்டுகள் ஆவதையொட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டம் வரும் 26-ம் தேதி நடக்கிறது.

இந்தக் கூட்டக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உரையாற்றுவார்கள் எனத் தெரிகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொண்டு, 1950, ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதை அடிப்படையாக வைத்து இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாகக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை நடக்கும். ஆனால் இந்த முறை அலுவல் நாள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு 70 ஆண்டுகள் ஆவதையொட்டி, வரும் 26-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்மாதம் 26-ம் தேதி நண்பகலில் தொடங்கும் கூட்டம் ஏறக்குறைய 2 மணிநேரம் வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இரு அவைகளின் எம்.பி.க்கள், குடியரசு முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள் ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாமல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுவார்கள். மேலும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பேச உள்ளனர்.

ஜிஎஸ்டி வரி அறிமுக நாளின் போது நள்ளிரவில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் 2017, ஜூன் மாதம் நடந்தது. அதேபோன்று கூட்டுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 50 ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட போது இதேபோன்ற நள்ளிரவுக் கூட்டம், அதாவது இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in