Published : 06 Nov 2019 11:17 AM
Last Updated : 06 Nov 2019 11:17 AM
ஜவுன்பூர்
உத்தரபிரதேச மாநிலம் ஜவுன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் (42). இவர், தனது நண்பருடன் அப்பகுதியில் இருக்கும் சந்தைக்கு நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஒரு கடையில் இருவரும் அவித்த முட்டையை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, யார் அதிக முட்டை சாப்பிட முடியும் என்பது தொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிக முட்டைகளை சாப்பிடுபவருக்கு மற்றொருவர் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என அவர்களுக்குள் பந்தயம் போட்டுக் கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, சுபாஷ் யாதவ் முட்டைகளை சாப்பிடத் தொடங்கினார். சிரமப்பட்டு 41 முட்டைகள் வரை சாப்பிட்ட அவருக்கு, சிறிது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல், அவர் 42-வது முட்டையையும் சாப்பிட்டுள்ளார்.
அப்போது, திடீரென சுபாஷ் யாதவ் மூர்ச்சையாகி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அப்பகுதியினர், உடனடியாக அவரை அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதிக அளவில் முட்டைகளை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பந்தயத்துக்காக, முட்டைகளை சாப்பிட்ட நபர் பலியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT