Published : 06 Nov 2019 07:36 AM
Last Updated : 06 Nov 2019 07:36 AM
புதுடெல்லி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் சதித்திட்டங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சென்னையை அடுத்த பெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை 1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து, வெவ்வேறு தருணங்களில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதற்கு நடுவே, ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் இருக்கும் சதித்திட்டங்கள் குறித்து, சிபிஐ தலைமையிலான கண்காணிப்பு குழு (எம்டிஎம்ஏ) ஒன்று விசாரித்து வருகிறது.
எனவே, இந்தக் குழுவின் விசாரணை நிறைவடையும் வரை, தமக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எம்டிஎம்ஏ சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ் கொலை தொடர்பாக இலங்கை, தாய்லாந்து உட்பட பல நாடுகளிடமிருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்த சமீபத்திய விசாரணை அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT