Published : 05 Nov 2019 11:20 AM
Last Updated : 05 Nov 2019 11:20 AM

தீவிரவாத தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மேற்குவங்க தொழிலாளர்கள்

தினஜ்பூர்

மேற்குவங்க மாநிலம் தினஜ்பூரைச் சேர்ந்த 138 தொழிலாளர்கள் காஷ்மீரில் இருந்து புறப்பட்டு நேற்று சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கியபின், காஷ்மீர் மாநிலத்துக்குள் வரும் வெளிமாநில மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுவரை காஷ்மீர் அல்லாத வெளிமாநிலங்களைச் சேர்ந்த 11 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் ஆவர்.

இதைத்தொடர்ந்து கட்டிட வேலை மற்றும் தச்சுவேலைப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் அண்மையில் சுட்டுக்கொலை செய்தனர். இதில் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் வேலை செய்து வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பீதி காரணமாக வெளியேறி வருகின்றனர். மேற்கவங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம் தினஜ்பூரைச் சேர்ந்த 138 தொழிலாளர்கள் காஷ்மீரில் இருந்து புறப்பட்டு நேற்று சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். பயம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறி விட்டதாக கூறிய அவர்கள் உள்ளூரில் வேலையில்லாமல் தவிப்பதாக கூறுகின்றனர். தாங்கள் உள்ளூரிலேயே இருக்க ஏதுவாக மேற்குவங்க அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x