Published : 04 Nov 2019 01:11 PM
Last Updated : 04 Nov 2019 01:11 PM

‘‘காரைப் பகிர்ந்து கொண்டோம்; பெட்ரோல் மிச்சம்’’- கேஜ்ரிவால் ட்வீட்

புதுடெல்லி

டெல்லியில் மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் சில அமைச்சர்கள் ஒரே காரில் பயணம் செய்தனர்.

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டது.

அந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக இது நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் டெல்லியில் காற்று மாசு கணிசமாகக் குறைந்திருப்பதாக டெல்லி அரசு ஏற்கெனவே கூறியிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்தபின் மீதமிருக்கும் கதிர்களை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லி வரை வந்து சேர்கிறது.

இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்துள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லியில் காற்று மாசைக் குறைக்க மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டத்தை அமலாக்கப்போவதாக கடந்த மாதமே டெல்லி அரசு அறிவித்தது.

ஏற்கெனவே அறிவித்தபடி இந்தத் திட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்றார். இதுபோலவே வேறு சில அமைச்சர்களும் சைக்கிளில் சென்றனர்.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சக அமைச்சர்கள் சிலருடன் ஒரே காரில் அலுவலகம் சென்றார். கேஜ்ரிவாலுடன், அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் ஆகியோர் ஒரே காரில் பயணம் செய்தனர்.

இதுகுறித்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘ஒரே காரில் பயணம் செய்வதன் மூலம் நட்பு பலமாகும். உறவுகள் வலுவடையும். பெட்ரோலும் மிச்சமாகும். காற்று மாசும் குறையும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x