Published : 04 Nov 2019 10:45 AM
Last Updated : 04 Nov 2019 10:45 AM

ஹரியாணாவில் ஆழ்துளைக் கிணற்றில் 50 அடி ஆழத்தில் விழுந்த 5 வயது சிறுமி: 10 மணிநேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டும் பரிதாப பலி

சிறுமியை மீட்புப்பணியில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்ட மண் அள்ளும் வாகனங்கள் : படம் ஏஎன்ஐ

சண்டிகர்

ஹரியாணாவில் ஆழ்துளைக் கிணற்றில் 50 அடி ஆழத்தில் நேற்று மாலை விழுந்த 5 வயது சிறுமி 10 மணிநேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டம், ஹர்சிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி (வயது 5). இவரின் வீட்டின் அருகே உள்ள கரவுண்டா பகுதியில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டு, மூடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை ஷிவானி கரவுண்டா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். நீண்டநேரம் ஆகியும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. சந்தேகமடைந்த ஷிவானியின் தாய் கரவுண்டா பகுதியில் வந்து தேடினார். அப்போது, அந்தப் பகுதியில் மூடாமல் இருந்த ஆழ்துளைக் கிணறு பகுதியில் இருந்து சிறுமி ஷிவானியின் சத்தம் வந்துள்ளது.

இதையடுத்து, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து, ஷிவானியை மீட்க அவரின் தாய் முயன்றார். ஆனால் மீட்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை, போலீஸார், மருத்துவக் குழுவுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புப் படையினர்,போலீஸார், மாவட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்கும் பணியில் இறங்கினர்.

முதலில் சிறுமிக்கு டியூப் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது. அதன்பின் ஒரு சிறிய டேப் ரெக்கார்டரில் சிறுமியின் தாய், தந்தை பேசும் குரலைப் பதிவு செய்து அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஒலிக்கவிடப்பட்டது. சிறுமி முதலில் 20 அடி ஆழத்தில்தான் சிக்கியிருந்தார். தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது திடீரென சிறுமி சறுக்கி 50 அடி ஆழத்துக்குச் சென்றார்.

இதையடுத்து, உடனடியாக பேரிடர் மீட்புப் பணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்தனர். சிறுமி சிக்கியுள்ள குழிக்கு அருகே மற்றொரு குழியை மண்தோண்டும் இயந்திரம் மூலம் தோண்டினர். ஏறக்குறைய குழி தோண்டும் பணி 10 மணிநேரம் வரை நடந்தது.

குழிக்குள் இருக்கும் சிறுமி மயக்கமடையாமல் இருக்க, தேவையான ஆக்சிஜனும், சிறுமியின் தந்தை, தாய் பேசும் ஒலிநாடாக்களை அவ்வப்போது ஒலிக்கவிட்டும் அவருக்குத் தைரியமும் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குழிக்குள் சிறிய கேமராவும் விளக்கு வெளிச்சமும் அளிக்கப்பட்டது. அவ்வப்போது சிறுமியின் செயல்பாட்டை, சிறிய கேமரா மூலம் வெளியிலிருந்து கண்காணிக்கப்பட்டது.

ஏறக்குறைய 10 மணிநேரத்துக்குப் பின், 50 அடி ஆழம் சென்றபின், பக்கவாட்டில் குழி அமைத்து, அந்தச் சிறுமியை பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். மிகவும் பலவீனமான நிலையிலிருந்த அந்தச் சிறுமியை உடனடியாக அங்கு இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி உயிரிழந்தார்.

கர்னல் அரசு மருத்துவமனையின் கூடுதல் மூத்த மருத்துவ அதிகாரி மருத்துவர் டாக்டர் ரவிந்தர் சாந்த், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் 'தி டிரிபியூன்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸ் எஸ்.பி. சுரேந்திர சிங் போரியா கூறுகையில், " ஏறக்குறைய 10 மணிநேரப் போராட்டத்துக்குப் பின் சிறுமி ஷிவானி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அதிகாலை 3 மணிக்கு வந்த பின் மீட்புப் பணி தீவிரமடைந்தது" எனத் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம், பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் 150 அடி ஆழத்தில் பதேவிர் சிங் என்ற 2 வயதுக் குழந்தை விழுந்தது. இந்தக் குழந்தை ஏறக்குறைய 110 மணி நேரத்துக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டது. அதன்பின்புதான் பஞ்சாப் மாநிலத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைக் கணக்கெடுத்து மூடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆழ்துளைக் கிணறுகளைச் சரியாகப் பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கையும் பாய்ந்தது.

கடந்த மார்ச் மாதம் ஹரியாணாவின் ஹிசார் மாவட்டத்தில் 18 மாதக் குழந்தை ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 2 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டது.

2006-ம் ஆண்டு ஹரியாணாவில் குருஷேத்ரா எனும் கிராமத்தில் 5 வயதுக் குழந்தை பிரின்ஸ், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. 2 நாட்கள் தீவிரப் போராட்டத்துக்குப் பின், உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சமீபத்தில் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் கடந்த மாதம் 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயதுக் குழந்தை சுஜித் 4 நாட்கள் போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x