வாட்ஸ் ஆப் தகவல் உளவு விவகாரம்: இஸ்ரேல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்காதது ஏன்?- ஒவைசி கேள்வி

வாட்ஸ் ஆப் தகவல் உளவு விவகாரம்: இஸ்ரேல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்காதது ஏன்?- ஒவைசி கேள்வி
Updated on
1 min read

ஹைதராபாத்

மொபைல் போன்களை ஹேக் செய்து வாட்ஸ் ஆப் தகவல்களை உளவு பார்த்தது இஸ்ரேல் நாட்டு நிறுவனம் என்பது தெரிகிறது, இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமல் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்கிறீர்கள் என ஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இஸ்ரேலைச் சேர்ந்த உளவு சாப்ட்வேர் பீகாசஸ் மூலம் இந்த பெயர் வெளியிடப்படாத நிறுவனங்கள் சில இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் தகவல்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது.

கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதுபற்றி கூறுகையில், "கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். அற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது" என உறுதியளித்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வருகிறது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளை உளவுபார்த்த மத்திய அரசு சிக்கிக்கொண்டது. இதை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் மெசேஜ் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இந்தநிலையில் ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மொபைல் போன்களை ஹேக் செய்து வாட்ஸ் ஆப் தகவல்களை உளவு பார்த்தது இஸ்ரேல் நாட்டு நிறுவனம் என்பது தெரிகிறது. பிறகு ஏன் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும். இஸ்ரேல் நாட்டு தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு விளக்கம் கேட்காலாமே. ஆனால் இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமல் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்கிறீர்கள். அவர்களிடம் கேட்க ஏன் தயங்குகிறீர்கள்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in