Published : 01 Nov 2019 05:23 PM
Last Updated : 01 Nov 2019 05:23 PM

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு: நவம்பர் 30 முதல் 5 கட்ட தேர்தல்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

புதுடெல்லி

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய 2 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுடன் நாட்டின் 11 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த மாதம் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் முதல்வர் பதவி தொடர்பான இழுபறியால் புதிய அரசு இன்னமும் பதவியேற்கவில்லை. ஹரியாணாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் துஷ்யந்த சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்தநிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதன் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

*நவம்பர் 30-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது

*டிசம்பர் 7-ம் தேதி: 2-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 12-ம் தேதி: 3-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 16-ம் தேதி: 4-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 20-ம் தேதி: 4-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

பின்னர் இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில் ‘‘ பாதுகாப்பு காரணங்களுக்காக 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. தேர்தல் அறிவிக்கை நவம்பர் 6-ம் தேதி வெளியிடப்படும். நவம்பர் 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும்’’ எனக் கூறினார்.

கடந்த மக்களவைத் தேர்தலில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(ஜேவிஎம்), லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை காங்கிரஸ் தலைமையில் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. எனினும் அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து பேச்சவார்த்தை நடத்தி வருகின்றன. அங்கு ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வரும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x