Published : 01 Nov 2019 10:37 AM
Last Updated : 01 Nov 2019 10:37 AM

மகாராஷ்டிராவில் மாற்று அரசு அமைக்க முயற்சி? -காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கும் விஷயத்தில் பாஜக – சிவசேனா இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.

ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மகாராஷ்டிர மாநில பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதல்வர் பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுபோலவே, சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஏக்னாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆட்சியில் 50;50 என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என சிவசேனா உறுதிபட தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட சிவசேனா தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேற்று சந்தித்து பேசினார்.

இதனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியை கைபற்ற முயலுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா தரப்பில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், அந்த மாநில அரசியல் நிலவரம் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களான பாலாசாகேப் தொரட், அசோக் சவான், பிரிதிவிராஜ் சவுகான், விஜய் வட்டிட்வார், மாணிக்கரோ தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து மாற்று அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு மகாராஷ்டிர விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x