ஐஎன்எக்ஸ் வழக்கு:மீண்டும் திஹார் சிறைக்குத் திரும்பிய சிதம்பரம்; அமலாக்கப்பிரிவு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் : கோப்புப்படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் : கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நவம்பர் 13-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சிதம்பரத்துக்கு இன்றுடன் விசாரணைக் காலம் முடிந்ததால், கூடுதலாக ஒருநாள் நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு விடுத்த கோரிக்கையை நீதிபதி அஜய் குமார் குஹெர் நிராகரித்தார்.

2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீட்டைச் சட்டவிரோதமாகப் பெற உதவினார். இதற்குப் பிரதிபலனாக அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு முதலீடு பெற உதவினார் என்று சிபிஐ குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரத்துக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது.

ஆனால், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்த வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ம் தேதி கைது செய்தது. அவரை 30ம் தேதிவரை விசாரிக்க அமாலக்கப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

இந்நிலையில், சிதம்பரத்துக்கான விசாரணைக் காலம் முடிந்ததையடுத்து, அவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹெர் முன் இன்று ஆஜர்படுத்தினார்கள். சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கப்பிரிவு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்கள்.

அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், " அமலாக்கப்பிரிவு கூடுதலாக ஒருநாள் காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரிக்கவேண்டியது இருக்கிறது. ஆதலால், நாளை ஒருநாள் மட்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்குச் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்புத் தெரிவித்து, அமலாக்கப்பிரிவுக்கு வழங்கிய விசாரணைக் காலம் இன்றுடன் முடிந்துவிட்டது கூடுதலாக வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குஹெர் சிறிதுநேரம் தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்பின் அவர் பிறப்பித்த உத்தரவில், " சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தார். சிதம்பரத்தின் உடல்நிலையைக் கருதி திஹார்சிறை அதிகாரிகள் அவருக்கு மருந்துகள், மேற்கத்தியக் கழிவறை, தனிச்சிறை, பாதுகாவலர்கள் ஆகியவற்றை வழங்கவும், வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட உணவை வழங்கவும் உத்தரவிட்டார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in