Published : 30 Oct 2019 04:20 PM
Last Updated : 30 Oct 2019 04:20 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: அவசர சிகிச்சை எடுக்க வேண்டும்;சிதம்பரம் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் 

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உடல்நலக்குறைவை காரணம் காட்டி, இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி சி. ஹரிசங்கர் ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்தநிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனிடைய ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்றுடன் விசாரணைக் காலம் முடிகிறது.

சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பல முறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சிறையிலிருந்து வரும் சிதம்பரம் 73.5 கிலோ எடையிலிருந்து 7.5 கிலோ குறைந்து, 66 கிலோவாக குறைந்து பலவீனமடைந்துவிட்டார்.

மேலும், குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சிதம்பரத்துக்கு ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திஹார் சிறையில் வழங்கப்படும் உணவு சிதம்பரத்தின் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், உடல்நலம் கருதி வீட்டு உணவை நாள்தோறும் ஒருவேளை மட்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தனது உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி சிதம்பரம் தரப்பில் அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், " 2017-ம் ஆண்டில் இருந்து குடல் அழற்சி நோய் இருந்து வருகிறது. தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவுக்குச் சிகிச்சை எடுக்க ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவ நிறுவனத்துக்குச் செல்ல வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் 6 நாட்கள் ஜாமீன் வழங்க வேண்டும். கடுமையான அடிவயிற்று வலி கடந்த 5-ம் தேதியில் இருப்பதால், அவசரமாக மருத்துவசிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

தனக்கு ஏற்பட்டுள்ள வயிற்று வலிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இரு முறை சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்கவில்லை. அங்குள்ள மருத்துவர்கள் கடந்த 7-ம் தேதியும், வலி நிவாரணி மாத்திரை வழங்கியும் பலனில்லை. 22ம் தேதி மீண்டும் மாற்று மருந்துகள்,மாத்திரைகள் வழங்கியும் வலி குறையவில்லை. அடுத்தகட்டமாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையிலும் சிகிச்சையும், மருத்துவப்பரிசோதனையும் எடுத்தோம்.

அதில், அடுத்த 16 வாரங்களுக்கு ஸ்டீராய்ட் சிகிச்சை அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதலால், ஏஜஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். என்னுடைய மருத்துவச் சிகிச்சை அறிக்கையை வழக்கமாகப் பரிசோதிக்கும் மருத்துவருக்கு மின்அஞ்சல் மூலமாக அனுப்பினோம்.

அதில் வயிற்றுப்புண் அதிகமாகிவிட்டதால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். என் உடல்நலக்குறைவால் உடல் எடை கடந்த 2 மாதங்களில் 7 கிலோ குறைந்துவிட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி சி. ஹரிசங்கர் ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x