

மும்பை
மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது.
இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக பட்னாவிஸ் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நரேந்திர சிங் தோமர் கூறுகையில் ‘‘மகாராஷ்டிர மாநில பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவிக்கு ஒரே ஒரு பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் தவிர வேறு யாரும் முன்மொழியப்படாததால் அவர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்’’ எனக் கூறினார்.