Published : 21 May 2014 09:58 AM
Last Updated : 21 May 2014 09:58 AM

இந்திய அரசியலில் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் கிடைக்காதது மகிழ்ச்சி: இலங்கை அமைச்சர் பேட்டி

இந்திய அரசுக்கு அழுத்தும் கொடுக்கும் செல்வாக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெகிலிய ராம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:

டெல்லியில் வலுவான அரசு அமைந்திருப்பது இலங்கைக்கு சாதகமாக இருக்கும். எந்தவொரு விவகாரமானாலும் தமிழகத்தின் அழுத்தம் இல்லாமல் டெல்லி அரசு முடிவெடுக்க முடியும்.

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் 37 இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும் மத்திய அரசில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இல்லை.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளார். அவர் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தனி மெஜாரிட்டியுடன் மோடி ஆட்சி அமைப்பதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

இந்திய மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றவுடன் இலங்கை அதிபர் ராஜபட்ச அவருக்கு முதலில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜபட்சவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x