Published : 28 Oct 2019 12:51 PM
Last Updated : 28 Oct 2019 12:51 PM

பொருளாதார சரிவு குறித்து ஏன் மிகை மவுனம்: ஷோலே படத்தின் வசனம் மூலம் பாஜகவுக்கு சிவேசனா கேள்வி 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்

மும்பை


நாட்டின் பொருளாதார மந்த நிலைகுறித்து மத்திய அரசு ஏன் அதீத மவுனம் காக்கிறது, தீபாவளிக்குச் சந்தை மகிழ்ச்சியற்று காணப்படுகிறதே என்று பாஜகவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தனது அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா' மூலம் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது சிவசேனா.

இந்தியில் வெளியான ஷோலே திரைப்படத்தில் புகழ்பெற்ற ஒரு வசனம் இருக்கிறது. அமைதியாக இருக்கும் மக்களைப் பார்த்து, நடிகர் ஏ.கே.ஹக்கால் " இத்னா சனாதா கியோன் ஹய் பாய்"(ஏன் அதீத மவுனமாக இருக்கிறீர்கள்) என்று பேசுவார். இதைக் குறிப்பிட்டு சிவசேனா எழுதியுள்ளது.

சிவசேனாவின் சாம்னா நாளேட்டில் எழுதப்பட்ட தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பொருளாதார சூழல் சரிவை நோக்கிச் செல்கிறது. அதிலும் தீபாவளி நேரத்தில் சந்தைகள் மிகவும் மந்தமாக இருக்கும்போது மத்திய அரசு அதீதமான மவுனம் காப்பது ஏன். ஏதேனும் மோசமான நாட்கள் மகாராஷ்டிராவுக்கும், தேசத்துக்கும் வரப்போகிறதா. இப்போது நிலவும் சூழல்கள், பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று மத்திய அரசு சித்தரிக்கும் தோற்றத்தைக் கேள்வி எழுப்பு தூண்டுகிறது.

நாட்டின் பொருளாதார சரிவுக்குத் திட்டமிடப்படாமல் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி தவறாக அமல்படுத்தப்பட்டதே இப்போதுள்ள சரிவுக்குக் காரணம்.

பொருளாதார மந்தநிலையால், சந்தையில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரைவிற்பனை சரிந்துவிட்டது. தொழில்துறை நலிவடைந்து ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டு வேலையின்மை அதிகரித்துள்ளது. ஏராளமான வங்கிகள் நிதிச்சிக்கலைச் சந்தித்து வருகின்றன, மக்களிடம் செலவு செய்யப் பணமில்லை.

இது ஒருபுறம் இருக்க, ரிசர்வ் வங்கியிடம் இருந்து கையிருப்பு நிதியை மத்திய அரசு வலுக்கட்டமாக பணத்தை பெறுகிறது. தீபாவளி நேரத்தில் சந்தைகள் அமைதியாக இருக்கின்றன. வெளிநாடுகளைச் சேர்ந்த ஆன்-லைன் நிறுவனங்கள் மக்களின் பணத்தை எடுத்து தங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்டு வருகின்றன.

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் தேசத்தின் துரதிருஷ்டம் யாரும் விவசாயிகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்களை எவ்வாறு இந்த சிக்கலிலிருந்து மீட்பது பற்றி யாரும் சிந்திக்கவில்லை.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x