Published : 27 Oct 2019 05:41 PM
Last Updated : 27 Oct 2019 05:41 PM

நட்சத்திர ஓட்டலில் ஏழைக் குழந்தைகளோடு தீபாவளி கொண்டாடிய அமைச்சர்

இந்தூர்,

மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் சில ஏழைக்குழந்தைகளை அழைத்துச்சென்று நட்சத்திர ஓட்டலில் தீபாவளியைக் கொண்டாடியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சரவையில் ஜிதேந்திர பட்வாரியும் ஒருவர். இவரை ஜிது பட்வாரி என்றும் அன்போடு அழைப்பார்கள். இவர் மத்திய பிரதேசத்தின் சுதந்திர போராட்ட வீரரான கோடர்லால் பட்வாரியின் பேரன் ஆவார்.

ஜிதேந்திர பட்வாரி உயர்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் அமைச்சராக இருப்பதாலோ என்னவோ குழந்தைகளோடு, அதிலும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளோடு இந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று ஒரு ஆசை உருவாகியிருக்கிறது அவருக்கு.

ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளை நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்களை மகிழ்விக்க வேண்டும். அவர்கள் வயிறார உண்பதைக் கண்டு மகிழ வேண்டும் என்பதுதான் அவரின் நீண்ட நாளைய ஆசை.

தனது உள்ளார்ந்த ஆசையை நிறைவேற்றும்விதமாக தீபாவளித் திருநாளான இன்று மதியம் இந்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றார். உணவகப் பகுதியில் இவர்களுக்காக ஏற்கெனவே பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு மேசைகளில் அனைவரையும் அமர வைத்தார்.

அனைவரிடம் கேட்டு கேட்டு அமைச்சரே பரிமாறிய காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில் பல்வேறு படங்களாக வெளியிட்டுள்ளது. அமைச்சரின் வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டத்திற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x