Published : 27 Oct 2019 08:57 AM
Last Updated : 27 Oct 2019 08:57 AM
புதுடெல்லி
மகாத்மா காந்தியுடன் பிரதமர் மோடி இருப்பது போல வரையப்பட்ட ஓவியம் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள் மின்னணு ஏலத்தில் விற்கப்பட்டு வருகின்றன. இந்த ஏலத்தில் வரும் தொகை முழுவதும் கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய கலை, கலாசாரத்துறை அமைச்சகம் மின்னணு ஏலத்துக்கு ஏற்பாடு செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி முதல் ஏலம் நடைபெற்று வருகிறது. இதுவரை பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட 2,772 பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்கள் அனைத்தும் டெல்லியிலுள்ள தேசிய மாடர்ன் ஆர்ட் கேலரியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள், அழகிய கலைப்பொருட்கள், சிலைகள், பொன்னாடைகள், இசைக் கருவிகள் என ஏராளமான பொருட்கள் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டிருந்தன. இந்த மின்னணு ஏலம் அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஏலத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த ஏலம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றுடன் அனைத்து நினைவுப் பரிசுகளும் ஏலத்தில் எடுக்கப்பட்டுவிட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர்கள் அனில் கபூர், அர்ஜுன் கபூர், பாடகர் கைலாஷ் கெர் உள்ளிட்ட ஏராளமானோர் நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
இந்த நினைவுப் பரிசுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.500-ம் அதிகபட்சமாக ரூ.2.5 லட்சமும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டன. ரூ.2.5 லட்சம் அடிப்படை விலை வைக்கப்பட்ட மூவர்ணணக் கொடி பின்னணியில் மகாத்மா காந்தியுடன், பிரதமர் மோடி இருக்கும் ஓவியம் ரூ.25 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
தனது தாயாரிடம் பிரதமர் மோடி ஆசி பெறும் படம் ரூ.1,000அடிப்படை விலையில் ஏலத்தில் வைக்கப்பட்டது. இது ரூ.20 லட்சத்துக்கு விலை போனது. 14 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சுவாமி விவேகானந்தர் சிலை ரூ.6 லட்சத்துக்கு (அடிப்படை விலை ரூ.4 லட்சம்) விலை போனது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT