Published : 26 Oct 2019 10:03 AM
Last Updated : 26 Oct 2019 10:03 AM

பாஜகவை எச்சரிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்

புதுடெல்லி

மகாராஷ்டிரா, ஹரியாணாவுடன் சேர்த்து, நாட்டின் 11 மாநிலங்களின் 51 சட்டப்பேரவை மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. நேற்று முன் தினம் வெளியான இதன் முடிவுகள் பாஜகவை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு மக்களவைத் தேர்தலில் கூடுதல் ஆதரவு கிடைத்திருந்தது. அதேசமயம், பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்த ராஜினாமாவிற்குப் பின் உருவான குழப்பம் இன்னும் முடிவிற்கு வந்தபாடில்லை.

மற்ற பல எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் கூட்டணியை முறித்துக் கொண்டன. இந்த சூழலில் அதீத நம்பிக்கையுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த பாஜகவிற்கு அதன் முடிவுகள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு மறுவாய்ப்பு கிடைத்தும் அதன் மக்களவைத் தொகுதியான சதாரா இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. இங்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்.பி.யாக இருந்த உதயன் ராஜே போஸ்லே, தேர்தலுக்கு சற்று முன்பாக பாஜகவில் இணைந்திருந்தார்.

இதனால், காலியான அந்த தொகுதியில் பாஜக சார்பில் சத்ரபதி சிவாஜியின் 13-வது வாரிசான ராஜே போஸ்லேவை மீண்டும் போட்டியிட வைத்தனர். ஆனால், அங்கு ஸ்ரீநிவாச பாட்டீல் என்பவரை நிறுத்திய என்சிபிக்கே மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது.

எனினும், பிஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் லோக்ஜனசக்தி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தை மாதிரி மாநிலமாக முன்வைத்து வளர்ந்த பாஜகவிற்கு அதன் ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் காங்கிரஸிடம் தோல்வி கிடைத்துள்ளது.

இதில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இளம் தலைவரான அல்பேஷ் தாக்கூர், தவல்சின்ஹ ஜாலா ஆகியோர் காங்கிரஸில் இருந்து சென்று பாஜகவில் போட்டியிட்டவர்கள். ம.பி.யில் பாஜகவின் பாரம்பரிய சட்டப்பேரவை தொகுதியான ஜாபுவாவை காங்கிரஸிடம் இழந்துள்ளது.

ராஜஸ்தானிலும் ஒரு சட்டப்பேரவை தொகுதியைப் பறித்து காங்கிரஸ் மேலும் உறுதியாகியுள்ளது. அனைத்தும் சேர்த்து 11 மாநிலங்களின் 51 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளுக்கு 30, காங்கிரஸ் 12 மற்றும் மீதியுள்ளவை பிராந்தியக் கட்சிகளிடம் சென்றுள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''தேசிய பிரச்சனைகளை மட்டும் நம்பி செய்த பிரச்சாரமும், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை அதே தொகுதிகளில் மீண்டும் நிறுத்தியதும் இந்த தோல்விக்கான காரணங்கள்.

பல தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால் கிடைத்த வெற்றியும் கட்சிக்கு சாதகமானதல்ல. வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்றாலும் இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் பாஜகவிற்கு எதிர்கால எச்சரிக்கையாக அமைந்துள்ளன'' எனத் தெரிவித்தனர்.

உபி, குஜராத் மற்றும் பிஹார் இடைத்தேர்தல்களின் பாதிப்பு அம்மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவகையில், பாஜகவிற்கு கிடைக்காமல் போன 21 தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லாபம் அடைந்துள்ளன.

உ.பி.யின் 11 தொகுதிகளில் பாஜக 7 இடங்களில் வெற்றி பெற்றது. ஆஸம்கானின் ராம்பூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. மீதம் ஒன்றில் சோனுலால் பட்டேல் பிரிவின் அப்னாதளம் வென்றுள்ளது.

ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கும், காங்கிரஸுக்கும் படுதோல்வி கிடைத்துள்ளன. பாஜகவின் ஏழு வெற்றி தொகுதிகளில் சமாஜ்வாதி மூன்று இடங்களில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது.

இதன்மூலம், பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக உ.பி.யில் மீண்டும் சமாஜ்வாதி உருவெடுத்துள்ளது. பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு பழைய வரவேற்பு கிடைக்கவில்லை.

பாஜகவின் முக்கியக் கூட்டணியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் இரண்டிலும், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாதுல் முஸ்லிமின் மற்றும் சுயேச்சை தலா ஒன்றும் பெற்றுள்ளன.

இதில், ஐதராபாத் எம்.பியான அஸாசுத்தீன் உவைஸியின் முஸ்லிமின் கட்சிக்கு முதன்முறையாக பிஹாரில் ஒரு தொகுதி வெற்றி கிட்டியுள்ளது. அசாமின் நான்கில் ஒரு தொகுதியை பாஜக, மற்றொரு முஸ்லிம் கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியிடம் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x