Published : 25 Oct 2019 08:16 PM
Last Updated : 25 Oct 2019 08:16 PM

ஹரியாணா இளைஞர்களுக்கு வேலையில் 75% இட ஒதுக்கீடு: ஆட்சியமைக்க கட்சிகளுக்கு துஷ்யந்த் சவுதாலா நிபந்தனை

குருகிராம்,

எங்களது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் எந்த ஒரு கட்சியுடனும் சேர்ந்து நாங்கள் ஆட்சியமைக்க விரும்புகிறோம் என்று ஜனநாயக ஜனதாக் கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா நிபந்தனை விதித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் ஆட்சியமைக்க ஜனநாயக ஜனதாக் கட்சித் தலைவர் வைக்கும் நிபந்தனைகள் பற்றி கூறும்போது, “வேலைகளில் ஹரியாணா இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு மற்றும் முதியோர் பென்ஷன் தொகையை அதிகரிப்பது எங்களின் குறைந்தப் பட்ச பொதுத்திட்டம். இதனை ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் நாங்கள் சேர்ந்து ஆட்சியமைக்கத் தயார்” என்றார்.

மாநிலத்தை முன்னேற்றுவதில் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் இளைஞர்கள் உரிமைகளையும் தான் உத்தரவாதம் செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர். 7 சுயேட்சைகள் மற்றும் ஹரியாணா லோகித் கட்சியின் சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ. கோபால் கண்டா ஆகியோர் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும் நேரத்தில் ஜனநாயக ஜனதாக் கட்சியின் பங்கு என்னவென்று கேட்ட போது, ‘தங்கள் கட்சியின் ஆதரவில்லாமல் நிலையான ஆட்சியை நடத்த முடியாது’ என்றார்.

ஜனநாயக ஜனதாக் கட்சி காங்கிரஸ், பாஜக் இரண்டையும் எதிர்த்துதான் நின்றது, எனவே தங்களுக்கு ஆதரவான மக்கள் தீர்ப்பு பாஜகவுக்கு மட்டுமே எதிரானது என்று கூற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் தங்கள் கட்சிக்குக் கிடைத்த 15% வாக்குகள் இளைஞர்களால் கிடைத்தது என்றார் சவுதாலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x