Published : 25 Oct 2019 12:26 PM
Last Updated : 25 Oct 2019 12:26 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் அமலாக்கத் துறை காவலை அக்டோபர் 30 வரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை ஜாமீன் வழங்கியது. இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை கடந்த 16-ம் தேதி கைது செய்தது. அவரை 7 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் அமலாக்கத்துறை காவல் நேற்று முடிவுக்கு வந்ததால் அவர் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 7 நாள் தங்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரியது. ஆனால் ப.சிதம்பரத்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் ஹைதராபாத்தில் தனது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரினார்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். “விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் அதற்கு இதனால் பாதிப்பு ஏற்படும். ப.சிதம்பரத்திற்கு உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து இருதரப்பு வாதங்களுக்கு பிறகு ப.சிதம்பரத்தின் அமலாக்கத்துறை காவலை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தின் மனுவுக்கு அமலாக்கத் துறை ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க நீதிபதி சுரேத் கைத் உத்தரவிட்டார். மேலும் மனு மீதான விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஜாமீன் மனுவில், “ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவோ அல்லது தலைமறைவு ஆகவோ வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.வழக்கில் ஆதாரங்களாக காட்டப்படும் ஆவணங்கள் அனைத்தும் விசாரணை அமைப்புகள் வசம் உள்ளன. அவற்றை ப.சிதம்பரம் திருத்த வாய்ப்பில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் வழக்குகள் ஒரே நிதிப் பரிவர்த்தனை தொடர்பானது என்பதால் தனித் தனி விசாரணைக் காவல் தேவையில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x