பலா,வாழை பழங்களில் இருந்து ஆல்ஹகால் குறைவான ஒயின்: கேரள அரசு திட்டம்
திருவனந்தபுரம்
பழங்களை பயன்படுத்தி குறைவான ஆல்ஹகால் அளவுடன் கூடிய ஒயின் மதுபானம் தயாரிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி தயாரித்துள்ள அறிக்கையை கேரள அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
கேரளாவில் பலாப்பழம், முந்திரிபழம், வாழைப்பழம் ஆகியவை அதிகஅளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் இவற்றின் விலை சரிந்து விடுவதால் பல சமயங்களில் போதுமான விளை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர்.
இந்தநிலையில் விவசாயிகளிடம் இருந்து பழங்களை கொள்முதல் செய்து குறைவான ஆல்ஹகால் மட்டும் கொண்ட ஒயின் மதுபானம் ஒன்றை தயாரிப்பது தொடர்பாக கேரள மாநில தோட்டக்கலைத்துறை திடடம் ஒன்றை உருவாக்கியது. இதற்கு கேரள சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது ஆய்வறிக்கையை கேரள அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதனை கேரள அமைச்சரவை இன்று ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனை தயாரிக்க கூடிய நிறுவனங்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிமம் வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.
