Published : 22 Oct 2019 11:06 AM
Last Updated : 22 Oct 2019 11:06 AM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, போப்பண்ணா, ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது.

இருப்பினும், சிபிஐ வழக்கிலேயே அவருக்கு இந்த ஜாமீன் கிடைத்துள்ளது. இதே வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவினரும் கைது செய்துள்ளதாலும் ஜாமீன் கிடைத்தும் சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவர இயலாத சூழலே உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோதமாக ரூ.305 கோடி பணம் பெற்றதாகவும், இது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.

வெளிநாடு செல்லத் தடை விதித்ததோடு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ ப.சிதம்பரம் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவருக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x