Published : 21 Oct 2019 10:27 AM
Last Updated : 21 Oct 2019 10:27 AM
புதுடெல்லி
ஹரியாணா, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பிஹாரில் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதிக்கும், மகாராஷ்டிராவில் சடாரா மக்களவைத் தொகுதிக்கும் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதேபோல் உத்தரப் பிரதேசத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள், குஜராத்தில் 6, பிஹார் மற்றும் கேரளாவில் தலா 5 சட்டப்பேரவைத் தொகுதிகள், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் தலா 4, தமிழகம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை முதலே இந்த தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி 2 லட்சம் மாநில போலீஸாரும், சிஐஎஸ்எப், மத்திய ரிசர்வ் போலீஸ், நாகாலாந்து பெண் போலீஸ் படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் போலீஸார் என மொத்தம் 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT