Published : 21 Oct 2019 09:02 AM
Last Updated : 21 Oct 2019 09:02 AM

கர்தார்பூர் வழித்தடம் நவம்பர் 9-ல் திறப்பு: மன்மோகன் சிங் பங்கேற்பார் என பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

புதுடெல்லி

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பங்கேற்கவுள்ளார்.

பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ் தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், தமது கடைசி காலத்தில் அப்பகுதியில்தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படு கிறது. அவரது நினைவாக ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாகும்.

இதற்காக, பஞ்சாபில் இருந்து விசா இல்லாமல் நேரடியாக கர்தார்பூர் செல்வதற்கு வழித்தடம் அமைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தது.

இதையடுத்து, இந்த வழித்தடம் அமைப்பதற்கு இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.கட்டுமானப் பணிகள் பாகிஸ்தானில் இறுதிக்கட் டத்தை எட்டியுள்ளன. இதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி அந்த வழித்தடத்தை தொடங்கி வைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இந்த வழித்தடத்தை பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைக்கவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நேற்று கூறினார். மேலும், இந் நிகழ்ச்சியில் முன்னாள் இந்தியப் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பங்கேற்கவுள்ளதாகவும் குரேஷி தெரிவித்துள்ளார். எனினும், மன்மோகன் சிங் தரப்பிலிருந்தும், காங்கிரஸ் தரப்பிலிருந்தும் இது தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இதனிடையே, கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வுக்கு செல்ல நபர் ஒருவருக்கு 20 டாலர் (ரூ.1,421) வீதம் பணம் செலுத்த வேண்டும் என பாகிஸ் தான் அறிவித்தது. ஆனால், பாகிஸ்தானின் இந்த அறிவிப்பை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், சாஹிப் குருத்வாராவுக்கு செல்வதற்காக நேற்று தொடங்க விருந்த ஆன்லைன் முன்பதிவு திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x