Published : 20 Oct 2019 06:58 PM
Last Updated : 20 Oct 2019 06:58 PM
புதுடெல்லி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்று இரவிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார். காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்திய ராணுவமும் பீரங்கி மூலமும், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தான் பகுதியிலிருந்த 7 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 4 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, இதில் ஹிஸ்பல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டார்கள். இந்திய தரப்பில் நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில் பாகிஸ்தான் பகுதியில் பலத்த சேதம் அடைந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர்10 பேர் கொல்லப்பட்டார்கள்.
இதுகுறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று கூறியதாவது:
காஷ்மீரின் தங்தார் பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நமது ராணுவம் பெரிய அளவில் பதிலடி தாக்குதல் நடத்தியது.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 3 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT