Published : 20 Oct 2019 10:08 AM
Last Updated : 20 Oct 2019 10:08 AM

தமிழகக் காவல்துறையினரிடம் கொள்ளையர்களுடன் நகைகளையும் ஒப்படைத்த உத்திரபிரதேசப் போலீஸார்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

தமிழகக் காவல்துறையின் படை கடந்த 17 ஆம் தேதி பரேலி வந்து சேர்ந்தது. இவர்களிடம் நேற்று உபி போலீஸார் கோவை கொள்ளையர்களுடன் அவர்களிடம் மீட்ட 1.3 கிலோ நகைகளையும் ஒப்படைத்தனர்.

பெங்களூருவில் இருந்து கோவை திரும்பிக் கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி விடியலில் 1.3 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவை, கோவை அசோக்நகரில் உள்ள தர்மா ஜுவல்லர்ஸ் உரிமையாளரான பி.முரளி நரசிம்மனுக்கு சொந்தமானவை.

இந்த வழக்கு தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலையீட்டின் பேரில் மூன்று தினங்களுக்கு பின் ரத்தினபுரி காவல் நிலையத்தில் பதிவானது. வழக்கு பதிவான பின் நகைகளை மீட்கும் முயற்சியில் தானே இறங்கிய முரளிக்கு கொள்ளையர்கள் உபியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

எனவே, உபியின் முராதாபாத்தில் உள்ள அம்மாநில சிறப்பு படையின் கமாண்டரும், தமிழருமான ஜி,முனிராஜ்,ஐபிஎஸ் உதவியால் எக்ஸான்(47), தேவேந்தர்(25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரும், தாம் கொள்ளையடித்த நகைகளை விற்க முற்பட்ட போது கடந்த 11 ஆம் தேதி பரேலி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கோவையின் நகைகளை விற்க முற்பட்டதாக ஐபிசி 411 உள்ளிட்ட வழக்குகள் பரேலியில் பதிவானது. முழுநகைகளும் மீட்கப்பட்டு இருவரும் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த செய்தி ‘இந்து தமிழ்’ நாளேட்டில் மட்டும் வெளியானதை படித்து கோவை போலீஸார் பரேலிக்கு தொடர்பு கொண்டனர். இதையடுத்து கோவை ரத்தினபுரி காவல் நிலையப் பகுதி (பொறுப்பு) உதவி ஆணையர் ராஜ்குமார் நவ்நீத் தலைமையில் ஐந்து பேர் வந்துள்ளனர்.

ரத்தினபுரி காவல் நிலையக் குற்றவியல் பிரிவு ஆய்வாளர் டி.வீரம்மாள், துணை ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமைக் காவலர் ஸ்ரீதரன் ஆகியோருடன் மேலும் இருகாவலர்கள் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

வீரம்மாள் மட்டும் கோவை நீதிமன்றத்தில் கொள்ளையர்களுக்கான ’டிரான்ஸிட் வாரண்ட்’ பெற்று மறுநாள் விமானத்தில் கிளம்பியுள்ளார். அனைவரும் டெல்லியில் இருந்து சாலைவழியாக வந்தவர்கள் 17 ஆம் தேதி மாலை பரேலி நகர ஆய்வாளர் ஜித்தேஷ் கபிலை சந்தித்துள்ளனர்..

இவர், இரு குற்றவாளிகளின் மீதான முக்கிய வழக்கின் விசாரணைக்கு நகைகளுடன் கோவை அனுப்ப ஆட்சேபனை இல்லை எனக் கூறியுள்ளார். எனவே, நேற்று முன்தினம் பரேலி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுச்செய்த அதன் நீதிபதி உத்தரவின் பேரில் கோவை போலீஸாரிடம் குற்றவாளிகளுடன் நகைகளும் ஒப்படைக்கப்பட்டன.

இதுபோல், கோவையில் கொள்ளையடித்து விட்டு உபியில் கைதாகும் கொள்ளையர்களிடம் ரூ.44 லட்சம் மதிப்புள்ள முழுநகைகள் மீட்கப்படுவது இதேவே முதல்முறை ஆகும்.

இவற்றுடன் தமிழகக் காவல்படை இன்று ரயில் மூலம் டெல்லியில் இருந்து கோவை கிளம்புகிறது. வரும் செவ்வாய் கிழமை கோவை நீதிமன்றம் முன் இருவரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x