Published : 17 Oct 2019 03:27 PM
Last Updated : 17 Oct 2019 03:27 PM

‘‘உங்கள் தோல்வியை முதலில் பட்டியலிடுங்கள்’’ - மன்மோகன் சிங்குக்கு பியூஷ் கோயல் பதில்

புதுடெல்லி


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதலில் தனது தோல்வியை பட்டியலிட வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘பிஎம்சி வங்கியில் நிகழ்ந்துள்ள மோசடி மிகவும் துரதிருஷ்டவசமானது. என்ன நடந்து இருந்தாலும் அந்த வங்கியின் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மகாராஷ்டிர முதல்வர், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோலவே ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு ஆகியவை இணைந்து பிஎம்சி வங்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

மகாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி எடுக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது’’ எனக் கூறினார்.

இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மன்மோகன் சிங் தனது தோல்வியை முதலில் பட்டியலிட வேண்டும். எங்கே நாம் தவறாக சென்றோம். எதனால் அவரால் மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியவில்லை. ஏன் ஒரு நேர்மையான அரசை வழிநடத்த முடியவில்லை.

எதனால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாமல் போனது. 10- ம் எண் ஜன்பத் சாலையில் (சோனியா காந்தியின் வீடு) இருந்து வரும் உத்தவை ஏற்பதை தவிர தானாக பிரதமர் என்ற அடிப்படையில் சொந்தமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் போனது ஏன் என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x