Published : 16 Oct 2019 03:54 PM
Last Updated : 16 Oct 2019 03:54 PM

இந்து மகா சபா தாக்கல் செய்த வரைபடத்தைக் கிழித்த வழக்கறிஞர்: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு

புதுடெல்லி

அயோத்தி வழக்கு விசாரணையின்போது இந்து மகா சபா அமைப்பு தாக்கல் செய்த வரைபடத்தை முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அயோத்தி ராம ஜென்ம பூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசிய மாகும். இல்லாவிடில் ஒட்டுமொத்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

எனவே, அக்டோபர் 18-ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்தர் குழு மூலம் மனுதாரர்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்குத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவித்தனர்.

இந்த வழக்கில் அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டமிட்டிருந்த நிலையில் 2 நாள் முன்கூட்டியே இன்று விசாரணையை முடித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியபோது, இந்து மகா சபா உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் விசாரணையை முழுமையாக நடத்த போதுமான கால அவகாசம் வேண்டும் எனக் கோரினர்.

ஆனால், அவர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நிராகரித்தார். போதும், இது போதும் எனக் கூறிய நீதிபதி, மாலை 5 மணிக்குள் விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு மேலும் இந்த வழக்கில் விசாரணைக்கு கால அவகாசம் வழங்க முடியாது எனவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார்.

இந்நிலையில் இந்து மகா சபா சார்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜரானார். அப்போது, அயோத்தி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிஷோர் குனால் எழுதிய புத்தகம் ஒன்றை சாட்சியாக சமர்ப்பித்தார். அதில் அவர் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தைக் காட்டும் வரைபடத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார்.

இதற்கு முஸ்லிம் தரப்பு வழக்கறிஞரான ராஜீவ் தவான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற புத்தகங்களை ஆதாரமாக காட்டக்கூடாது எனக் கூறினார். அப்போது வரைபடங்களை விகாஸ் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போது அதனை வாங்கிப் பார்த்த ராஜீவ் தவான் அதனைக் கிழித்துப் போட்டார்.

இதுபோன்றவற்றை எப்படி ஆதாரமாக எடுக்க முடியும் என ராஜீவ் தவான் கூறினார். எதிர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்த வரைபடத்தை ராஜீவ் தவான் திடீரென கிழித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் இதுபோன்று நடந்து கொண்டால் நீதிபதிகள் எழுந்து சென்று விடுவோம் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார்.

பின்னர், ராஜீவ் தவானிடம் உங்கள் தரப்பு எதிர்ப்பைப் பதிவு செய்துகொண்டோம் எனக் கூறிய நீதிபதிகள், விகாஸ் சிங்கை, தொடர்ந்து வாதங்களை முன்வைக்குமாறு கூறினர்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x