Published : 15 Oct 2019 07:30 AM
Last Updated : 15 Oct 2019 07:30 AM

ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்

புதுடெல்லி

ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பதில் அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.2,000 நோட்டு ஒன்று கூட அச்சிடப் படவில்லை எனவும் இந்த பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தகவல் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆர்பிஐ அளித்துள்ள பதிலில், “2016-17-ம் நிதியாண்டில் சுமார் 354.30 கோடி ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இது 2017-18-ம் நிதியாண்டில் சுமார் 11.15 கோடி நோட்டுகளாக பெருமளவு குறைக்கப்பட்டது. 2018-19-ம் ஆண்டில் இது மேலும் குறைக்கப்பட்டு 4.67 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. 2019-20-ம் நிதியாண்டில் ரூ.2,000 நோட்டு எதுவும் அச்சடிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

என்றாலும் இதுவரை அச்சடிக் கப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் குறையும்போது, மொத்த பணப் புழக்கத்தில் பிரச்சினை ஏற்படாதவாறு ஆர்பிஐ தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என அதிகார வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுப்பதற்காக 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி அறிவித்தது. இதையடுத்து அதே மாதத்தில் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. என்றாலும் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம், அதிக மதிப்புடைய இந்த நோட்டுகளால் தோல்வி அடைய வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக இதற்கு முன்னரும் தகவல் வெளியாகின. என்றாலும் இதனை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மறுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x